×

பொதுமக்கள் வலியுறுத்தல் காவலாளியை மரத்தில் கட்டி வைத்து விட்டு அன்னமங்கலம் டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்கள் கொள்ளை

பெரம்பலூர், டிச. 18: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் கிராமத்தில் விசுவக்குடி அணைக்கட்டு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று நள்ளிரவு முகமூடி அணிந்த மர்மநபர்கள் 6 பேர், அன்னமங்கலம் டாஸ்மாக் கடையில் தற்காலிக காவலாளியாக பணிபுரியும், ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லியை சேர்ந்த 46 வயது மதிக்கத்தக்க நபரை தாக்கி சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்தனர். பின்னர் அவரது கழுத்தில் துணியை மாட்டி தரதரவென இழுத்து சென்று 50 அடி தூரத்திற்கு அருகில் உள்ள கிணற்றோர மரத்தில் கட்டி வைத்தனர்.

இதையடுத்து சாவகாசமாக வந்து கடையின் பூட்டை உடைத்து திறந்துள்ளனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி வசூல் பணம் இல்லாததால் மேஜை டிராயரில் இருந்த ரூ.4 ஆயிரத்தை எடுத்து கொண்டனர். பின்னர் ரூ.4 ஆயிரம் மதிப்பிலான குவாட்டர் பாட்டில்களை கொள்ளையர்கள் அள்ளி சென்றனர். மொத்தத்தில் பணம், மதுபாட்டில்கள் என ரூ.10 ஆயிரம் மதிப்பில் கொள்ளை நடந்தது. அதிகாலை 3 மணிக்கு பிறகு அந்த வழியாக வயலுக்கு சென்ற விவசாயிகள், மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கெங்கவல்லி காவலாளியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : public ,guard ,store ,Annamangalam Tasmac ,
× RELATED மாவட்ட அளவிலான செயல் திட்டத்தை...